Saturday, May 18, 2024
Home » ஆப்கான் ஏ அணியை மீண்டும் வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை

ஆப்கான் ஏ அணியை மீண்டும் வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை

by mahesh
May 4, 2024 9:28 am 0 comment

ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேச போட்டியிலும் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை ஏ அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரை 3–0 என கைப்பற்றியது.

இதன்போது இலங்கை ஏ அணி சார்பில் மொஹமட் ஷிராஸ் அபாரமாக பந்து வீசியதோடு பசிந்து சூரிய பண்டார துடுப்பாட்டத்தில் சோபித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று (03) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த ஆப்கான் ஏ அணி ஆரம்பம் தொட்டே தடுமாற்றம் கண்டது. ஆப்கானிஸ்தான் அணியின் மூதல் மூன்று விக்கெட்டுகளையும் ஷிராஸ் வீழ்த்த, அந்த அணி தடுமாற்றம் கண்டது.

ஆப்கான் ஏ அணியின் மத்திய வரிசை விக்கெட்டுகளும் மளமளவென்று சரிந்ததால் அந்த அணி 41.2 ஓவர்களில் 185 ஓட்டங்களுக்கே சுருண்டது. பின் வரிசையில் வந்த சியா உல் ரஹ்மான் பெற்ற 36 ஓட்டங்களுமே அதிகமாகும்.

இதன்போது சிறப்பாக பந்துவீசிய ஷிராஸ் 6 ஓவர்களில் 31 ஓட்டங்களை விட்டுக்கெடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். சொனால் தினூஷ மற்றும் துஷான் ஹேமன்த தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த நிஷான் மதுஷ்க தலைமையிலான இலங்கை ஏ அணி 85 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் மத்திய வரிசையில் பசிந்து சூரியபண்டார சிறப்பாக ஆடி இலங்கை அணியை வெற்றிவரை அழைத்துச் சென்றார்.

கடைசி வரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்து சூரியபண்டார 109 பந்துகளில் 9 பௌண்டரிகளுடன் 84 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் இலங்கை ஏ அணி 37.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 186 ஓட்டங்களை எட்டியது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் மொஹமட் சலீம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான நான்காவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டி நாளை (05) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT