இலங்கை குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் சிறு இடைவெளிக்குப் பின்னர் போட்டிக்கு திருப்பி 2024 ஆம் ஆண்டில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இத்தாலியில் நடைபெற்ற பிளோரன்ஸ் ஓட்டப் போட்டியின் 150 மீற்றர் ஓட்டத்தை தனது இரண்டாவது அதிவேக காலமான 15.19 விநாடிகளில் நிறைவு செய்து முதல் இடத்தை பிடித்துள்ளார். 150 மீற்றர் ஓட்டத்தை முன்னர் 15.16 விநாடிகளில் நிறைவு செய்த அவர் ஆசிய சாதனையையும் பதிவு செய்துள்ளார்.
யுபுன் ஆண்களுக்கான 100, 200 மற்றும் 150 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தேசிய சாதனையை படைத்தவராவார். எனினும் கடந்த ஆண்டில் உபாதை காரணமாக அவர் உலக தடகள சம்பியன்சிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் கடந்த ஆண்டில் அவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளிலேயே பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் அவர் குறிப்பிடத்தக்க இடைவெளிக்குப் பின்னர் பங்கேற்ற முதல் போட்டியிலேயே வெற்றியீட்டி இருப்பது முக்கிய அம்சமாகும்.
யுபுன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10 விநாடிக்குக் குறைந்த காலத்தில் நிறைவு செய்த ஆசியாவின் முதலாவது மற்றும் ஒரே வீரராக உள்ளார். இந்த ஆண்டில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நிலையில் அவர் திறமைக்கு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.