Tuesday, April 30, 2024
Home » ஈரான் தாக்குதலையடுத்து காசாவில் ‘போரைத் தொடர’ இஸ்ரேல் உறுதி

ஈரான் தாக்குதலையடுத்து காசாவில் ‘போரைத் தொடர’ இஸ்ரேல் உறுதி

- உலக நாடுகளின் எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிராந்தியத்தில் பதற்றம் உச்சம்

by sachintha
April 16, 2024 6:48 am 0 comment

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதோடு ஈரானின் தாக்குதல் காசா போரில் இருந்து தம்மை திசைதிருப்பாது என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (13) 300க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு ஈரான் நடத்தி தாக்குதலை அடுத்து அமைதி காக்கும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. பெரும்பாலான தாக்குதல்களை இடைமறித்ததாக இஸ்ரேல் கூறியது.

இந்த மாத ஆரம்பத்தில் டமஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் அமைந்திருந்ததோடு இஸ்ரேல் மீது ஈரான் நடத்தும் முதல் நேரடித் தாக்குதலாகவும் இது இருந்தது. எனினும் காசா போர் ​ெவடித்தது தொடக்கம் ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘ஈரானின் தாக்குதலுக்கு இலக்கானபோதும் கூட, ஈரான் ஆதாரவு ஹமாஸின் கைகளில் இருந்து எமது பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக காசாவில் எமது தீர்க்கமான நடவடிக்கையில் இருந்து எமது பார்வையை ஒரு கணம் கூட நாம் இழக்கமாட்டோம்’ என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகரி குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் ஒன்றுக்கான முயற்சியில் மத்தியஸ்தர்கள் தொடர்ந்து ஈடுபட்டிருந்தபோதும் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் தெற்கு நகரான ரபா மீது இஸ்ரேல் படையெடுப்பு ஒன்றுக்கு திட்டமிட்டிருப்பது நிலைமையை மோசமடையச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது.

‘காசாவில் ஹமாஸ் இன்னும் எமது பணயக்கைதிகளை பிடித்து வைத்துள்ளனர்’ என்று ஹகரி குறிப்பிட்டார். காசாவில் தொடர்ந்து 130 பணயக்கைதிகள் இருப்பதாகவும் அதில் 34 பேர் மரணித்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.

‘ரபாவிலும் எமது பணயக்கைதிகள் இருப்பதோடு அவர்களை மீட்பதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்’ என்று இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காசா முன்னரங்குகளின் போர் நடவடிக்கைகளுக்காக இஸ்ரேல் இரு மேலதிக படைப் பிரிவுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. காசாவில் இருந்து பெரும்பான்மை தரைப்படைகளை இஸ்ரேல் கடந்த வாரம் வாபஸ் பெற்ற நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் கடும் வான் தாக்குதல்களை நடத்தியதாக காசா அரச ஊடக அலுவலகம் நேற்று குறிப்பிட்டது.

முற்றுகையில் உள்ள காசாவின் தெற்கில் இருந்து வடக்கில் காசா நகருக்கு செல்லும் கடற்கரை வீதி சோதனைச்சாவடியை இஸ்ரேல் திறந்ததாக வதந்தி பரவியது அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வடக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். எனினும் அதனை இஸ்ரேல் மறுத்தது.

இவ்வாறு சென்றவர்கள் மீது இஸ்ரேல் சூடு நடத்தியதில் தனது மகளின் முகத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாக பலஸ்தீன தாய் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவலை பலஸ்தீன புகைப்படப்பிடிப்பாளர் அட்டியா தார்விஷ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் கொல்லப்பட்ட மகளை கட்டித்தழுவியபடி அழுது கொண்டிருக்கும் அந்தத் தாயின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

எனினும் தெற்கு நகரான கான் யூனிஸில் இருக்கும் தனது மனைவியுடன் ஒன்றிணைவதற்கு எதிர்பார்த்திருக்கும் மஹ்மூத் அவ்தாஹ் என்ற பலஸ்தீனர் கூறியதாவது, ‘மக்கள் வெளியேறி இருப்பதாக அவர் தொலைபேசியில் என்னிடத்தில் குறிப்பிட்டார்.

வடக்கை நோக்கி வெளியேறுவதை இராணுவம் அனுமதிக்கும் வரை அவர் சோதனைச் சாவடியில் காத்திருக்கிறார்’ என்றார்.

என்றாலும் இந்தப் பாதை திறக்கப்படுவதான செய்தி உண்மையில்லை என்று இஸ்ரேல் இராணுவம் ஏ.எப்.பி. செய்தி நிறுவத்திடம் குறிப்பிட்டுள்ளது.

பதில் தாக்குதலுக்கான அச்சம்

ஈரான் தாக்குதலை அடுத்து கடந்த ஞாயிறன்று ஐ.நா. பாதுகாப்புச் சபை அவசர கூட்டத்தை நடத்தியபோது, ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை விதிக்க இஸ்ரேல் வலியுறுத்தியதோடு, பிராந்தியமே போரின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்தார்.

‘பிராந்தியத்தினாலோ அல்லது உலகத்தினாலோ மேலும் போர்களை தாங்க முடியாது’ என்று வலியுறுத்திய குட்டரஸ், தற்போது பதற்றத்தை தணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக வலியுறுத்தினார்.

ஐ.நாவுக்கான ஈரான் தூதுவர் ஆமிர் செயித் இரவானி, டமஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரக தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக ‘தாற்காப்புக்கான இயல்பான உரிமையையே’ ஈரான் செயற்படுத்தியதாக வலியுறுத்தினார்.

‘ஈரான் பதற்றத்தை அதிகரிக்கவோ அல்லது போரையோ நாடவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இஸ்ரேல் தொடர்ந்து உஷார் நிலையில் இருப்பதாகவும் நிலைமையை மதிப்பீடு செய்து வருவதாகவும் இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ஹகரி தெரிவித்துள்ளார்.

ஈரானின் தாக்குதலை கண்டித்த ஜி7 தலைவர்கள் அனைத்து தரப்புகளையும் அமைதி காக்கும்படி அழைப்பு விடுத்தனர்.

‘அவசர போர் நிறுத்தம் ஒன்றின் மூலம் முடியுமான விரைவில் காசா பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவது, மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக அமையும்’ என்று ஐரோப்பிய கௌன்சில் தலைவர் சார்ல்ஸ் மைக்கல் ‘எக்ஸ்’ சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவும் எச்சரிக்கையுடன் இருக்கவும் அமைதி காக்கவும் வலியுறுத்தியுள்ளது. ‘இந்த நிலைமை தீவிரமடைவதை நாம் விரும்பவில்லை’ என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கௌன்சில் பேச்சாளர் ஜோன் கிர்பி குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தாக்குதலை அடுத்து இஸ்ரேலை ‘இரும்புக் கவசம் கொண்டு பாதுகாப்பதாக’ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் ஒருமுறை கூறியபோதும், ஈரான் மீதான எந்த ஒரு பதில் தாக்குதலுக்கும் அமெரிக்கா உதவாது என்று அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேலின் ‘பொறுப்பற்ற’ பதிலடி தொடர்பில் கடந்த ஞாயிறன்று எச்சரித்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அது தீர்க்கமான மற்றும் சக்திவாய்ந்த பதிலடிக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டார்.

ஈரான் தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் பாடசாலைகள் மூடப்பட்டு, கூட்டங்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் அவை பெரும்பகுதிகளில் தளர்த்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று குறிப்பிட்டது.

தொடரும் பேச்சு

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் பிராந்தியத்தில் பதற்றம் தீவிரம் அடைந்து காணப்படுகிறது. காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தும் நீடித்து வருகிறது.

மத்திய காசாவில் உள்ள நுஸைரத் அகதி முகாமின் வடமேற்கில் இருக்கும் வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் ஞாயிறு இரவு நடத்திய வான் தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. போர் விமானங்கள் அர்பி குடும்பத்திற்கு சொந்தமான வீட்டை தாக்கி இருப்பதோடு அங்கிருக்கும் பள்ளிவாசல் ஒன்றை தரைமட்டமாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 68 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 94 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி கடந்த ஏழு மாதங்களாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 33,797 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 76,465 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்காக கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி தொடக்கம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் நீடித்து வரும் நிலையில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த திட்டம் ஒன்றுக்கு ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை பதில் அளித்திருந்தது.

எனினும் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வெளியேறுவது ஆகிய தமது முந்தைய நிபந்தனைகளில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

இது போர் நிறுத்த முன்மொழிவை நிராகரிப்பதாக உள்ளது என்று இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட் குறிப்பிட்டதோடு ஹமாஸ் ஈரானுடனான பதற்றத்தை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வதாகவும் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

எனினும் மத்தியஸ்த முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT