– ஐ.ம.ச அரசாங்கத்தில் தோல்வியுற்ற வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு
ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி தோல்வியுற்ற வேட்பாளர்களுக்கும் சேவையாற்ற வாய்ப்பு வழங்கப்படும். தங்களைப் பற்றி சிந்திக்காமல் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். உலகின் 1 இடத்தைப் பெறுவதற்கான பயணத்தில் தாய் நாடும் 220 இலட்சம் மக்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வங்குரோத்தான நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட தனவந்தர்கள் இந்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கமிஷன் பிடிக்காது. கமிஷன் கோரும் ஆட்சி உள்ள நாட்டில் பணத்தை செலவழிக்க அவர்கள் தயாராக இல்லை. அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும் என்பதால், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் தகவல்கள் அறியும் உரிமை மேலும் பலப்படுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விலைமனு கோரல் முறை கூட சீர்குலைந்துள்ள இந்நேரத்தில், எந்த வித ஊழலையும் ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது. வங்குரோத்தாகி கிடக்கும் நாட்டில், ஊழல் ஒழிந்து பொருளாதாரம் மேம்பட வேண்டும். ஏற்றுமதி சார்ந்த பொருளாதார அபிவிருத்தியை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
வழமையான அரசியல் கட்டமைப்பில் அரசாங்க வளங்களைப் பயன்படுத்தி நண்பர்களுக்கு ஒப்பந்தங்களை கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். கடந்த காலத்தில் இவ்வாறன விடயமே நடந்தது. ஐக்கிய தேசியக் கட்சி, மொட்டு, சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி போன்ற அனைத்துக் கட்சிகளும் இவ்வாறானதொன்றையே செய்தன. இதற்குப் பயன்படுத்தப்படும் பணம் கல்விக்கு பயன்படுமானாப், அது மிகவும் பிரயோசமுள்ளதாக அமையும். பணத்தால் சொத்தை அபகரிக்க முடியும். ஆனால் அறிவை ஒருபோதும் திருட முடியாது. அதனால் தான் அறிவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி வரூவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 147 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், புத்தளம், நாத்தாண்டிய,நாரவில ஶ்ரீ குணரத்ன மத்திய மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (08) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கல்லூரியின் நடனம்,வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.