சவூதி அரேபியா மன்னர் சல்மானின் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தின் நூர் தன்னார்வத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி வைத்தியசாலையில் ஏற்பாடு செய்துள்ள கண்புரை சத்திரசிகிச்சை முகாம், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி தலைமையில் நேற்று 08 ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் ஹாபீஸ் நஸீர் அஹமத் விசேட அதிதியாகக் கலந்து கொண்டதுடன், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், சவூதி அரேபிய மன்னர் சல்மானின் ‘நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான மன்னர் மையத்தின் பணிப்பாளர் கண்சத்திரசிகிச்சை நிபுணர் அப்துல் கரீம், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
‘சவூதியின் ஒளி’ இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாமை தூதுவர் பார்வையிட்டதுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஜாபீர், அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார். ‘சவூதியின் ஒளி’ இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாம் கடந்த (06) திங்கட்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பமானது.
சவூதி அரேபிய மன்னர் சல்மானின் ‘நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான மன்னர் மையம்’ (King Salman Humanitarian Aid and Relief Centre) இதற்கான நிதி அனுசரணை வழங்குகின்றது. சத்திரசிகிச்சை முகாம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் இதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கண் வைத்தியர்கள் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
இத்திட்டத்துக்காக நாடளாவியரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பரிசோதனை முகாம்கள் மூலம் சகல இனங்களையும் சேர்ந்த வசதி குறைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
புதிய காத்தான்குடி தினகரன், ஏறாவூர் நிருபர்கள்