சூரியன் தன் பயணத்தை, கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான், தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. மங்களகரமான குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு வருட பிறப்பு 14-04-2024 சித்திரை திங்கள் 01 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும். சோபகிருது ஆண்டு பங்குனி மாதம் 31ம் நாள் சனிக்கிழமை இரவு மணி 8.10 க்கு ஸ்திர துலா லக்கினத்தில் சனி ஓரையில் முடிவடைந்த பிரகு, தமிழ் (ஸ்ரீ க்ரோதி நாம சம்வத்சரம்) புத்தாண்டான குரோதி பிறக்கிறது.
குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு
ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சஷ்டி திதியில், திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, அதிகண்ட யோகம், தைதுளை கரணத்தில் குரோதி தமிழ் வருட பிறப்பு உதயமாகிறது. சித்திரை மாதம் சூரியன் மேஷத்தில் உச்சமாகி அமர்கிறர். இந்த ஆண்டு புத்தாண்டின் சிறப்பு என்னவென்றால், குருவும் சூரியனுடன் அமர்ந்துள்ளார் என்பதுதான். ஏனென்றால், இது மிகப்பெரிய அரிய கோச்சார அமைப்பு.
குருவுடன் உச்ச சூரிய சேர்க்கை என்பது அரிதான நிகழ்வு, இது 12 ஆண்டுக்கு ஒரு முறையே நடைபெறும் என்பதால், இந்த குரோதி புத்தாண்டு பலருக்கும் நன்மையாகவே மலரும். குரு – சூரியன் இணைவு, சூரியனால் ஏற்படும் பல தோஷங்களை நீக்கிவிடும். சூரியன் உச்சமாகும் நிலையில் அவருடன் குருபகவான் உள்ளதால் ஆரோக்கியம் மேம்படும். அறிவு கூர்மையாகும். குழந்தை பேரு சிறக்கும். நிர்வாகத்திறன் மேம்படும்.
குரோதி வருஷம் வெண்பா “அறுபது வருட வெண்பா” என்று தமிழ் ஆண்டுகள் தொடர்பான வெண்பா இடைக்காடர் என்ற சித்தரால் பாடப்பட்டது. குரோதி தமிழ் புத்தாண்டு 60 ஆண்டுகளில் 38வது ஆண்டு ஆகும்.
”கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால் பாரிற் சனங்கள் பயமடைவார் – கார்மிக்க அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே சொற்பவிளையுண்டெனவே சொல்”.
குரோதி வெண்பா விளக்கம்
குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும் கொள்ளை களவு பகை பெருகும் என்று இந்த வெண்பா கூறுகிறது. திருடர்கள் மக்களை தாக்குவார்கள், பயம் மிகுதியாகும். மழை குறைவாகவே பொழியும் என்பதால் உணவுப் பொருள் பஞ்சம் ஏற்படும் என்று குரோதி வருட பஞ்சாங்க வெண்பா கூறுகிறது.