அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டியை உரிய முறையில் பராமரித்து உச்சபட்ச நன்மையடைய வேண்டுமென, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலைக்குரிய எரியூட்டியை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (29) நடைபெற்றது. இதில் உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளை தொற்று நீக்கி, பாதுகாப்பாக அகற்றுவதற்கான அவசியம் நீண்டகாலமாக உணரப்பட்டதுடன், இதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் 40 மில்லியன் ரூபா நிதி உதவியில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த எரியூட்டியானது, நீண்டகால எதிர்பார்ப்புக்கு தீர்வாக அமைந்துள்ளது” என்றார்.