சில வாரங்களில் விசேட வர்த்தமானி வெளியீடு
மே மாதத்துக்குள் சேவையில் இணைப்பு
மத்திய, ஊவா மாகாணங்களில் 500 பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனம்
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிடப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிர்வரும் வரும் மே மாதத்துக்குள் ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்து, அவர்களுக்கு அடிப்படை பயிற்சியளித்த பின்னர் பாடசாலைகளுக்கு அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாகவும், அமைச்சர் சுசில் தெரிவித்தார்.
நிலையான தீர்வுகளை வழங்குவது சவாலாக இருக்கும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான மாற்றுத் தீர்வுகளினூடாக கல்வி முறையை தொடர்வதே தமது எதிர்பார்ப்பென்றும் தெரிவித்த கல்வி அமைச்சர், பெருந்தோட்டப் பாடசாலைகளில் இன்னமும் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
கல்வியியல் கல்லூரிகளுக்கு தகுதி பெறும் மாணவர்கள் மிகக் குறைவு எனவும் பட்டதாரிகள் ஒரு சிலரே உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அதற்கு தீர்வாக தற்போது ஊவா மற்றும் மத்திய மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்ததந்த மாகாண அதிகாரிகளிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர் சேவை யாப்பின் பிரகாரம் தகைமை பெற்ற ஐந்நூறு ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சுக்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் மூன்று வருடங்களுக்குள் ஆசிரியர் மத்திய நிலையங்கள் மூலம் டிப்ளோமா மட்டத்தில் அவர்கள் பயிற்சியளிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.