சவூதி அரசானது உலகெங்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் விடயத்தில் கவனம் செலுத்தி அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றது. இலங்கை மக்களுக்கும் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு சவூதி அரசு பாரபட்சம் இன்றி அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியான உதவிகளை செய்து வருகின்றது.
ரமழான் மாதம் வருவதற்கு முன்பே இலங்கை முஸ்லிம்கள் சவூதி அரேபியாவின் பேரீச்சம்பழங்களை எதிர்பார்த்து இருப்பதும், ரமழானில் பள்ளிவாசல்களில் சவூதி அரேபிய அன்பளிப்பு பேரிச்சம்பழங்கள் பங்கீடு செய்யப்படுவதும், சவூதி அரசின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற இப்தார்களும் வழமையான சம்பிரதாயங்கள் ஆகும். சவூதி அரசின் இவ்வன்பளிப்புகள் இன்றும் தொடர்கின்றன.
வழமை போன்றே இவ்வருடமும் சவூதி அரேபிய அரசு இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக வழங்கியதுடன், சவூதி அரேபியாவின் முஸ்லிம் விவகார அமைச்சு இலங்கையில் பல இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.
அவற்றுள் மிக முக்கியமாக குறிப்பிடக்கூடிய ஒன்றுதான் மல்வானையில் அமைந்துள்ள அல் இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இப்தார் நிகழ்வாகும். முழுமையாக சவூதி அரசின் அனுசரணையில் பின் பாஸ் மகளிர் கல்லூரியின் சிறப்பான ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில் மல்வானை வாழ் 300 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கல்லூரியின் வெளிப்புற திறந்த இடத்தில் நடைபெற்றது. மல்வானை முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்து தமது உறவை புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் இது வழங்கியிருந்தது. அதுமட்டுமன்றி ஊர் மக்களும் கல்லூரிக்குமிடையிலான தொடர்பையும் வலுப்படுத்தி, சவூதி அரசு தொடர்பான நல்லெண்ணத்தையும் உருவாக்கியது.
இந்த நலன்களுக்குக் காரணமாக இருந்த சவூதி மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஃஊத் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் ஆல் ஸஃஊத் ஆகியோருக்கும், முஸ்லிம் விவகார அமைச்சர் ஷேய்க் அப்துல்லதீப் பின் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷேய்க், சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் உஸ்தாத் ஹாலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, முஸ்லிம் விவகார அமைச்சின் மதேவிவகார ஒருங்கிணைப்பாளர் ஷேய்க் பத்ர் பின் நாஸிர் அல்அனஸி ஆகியோருக்கு பலரும் நன்றி தெரிவித்தனர்.
கலாநிதி
எம்.எச்.எம்.அஸ்ஹர்…
(PhD) பணிப்பாளர், பின் பாஸ்
மகளிர் கல்லூரி, மல்வானை