தவக்காலத்தின் மூன்று முக்கியமான தினங்களை நாம் இந்த வாரத்தில் அனுஷ்டிக்கின்றோம். இந்த வாரத்தின் பெரிய வியாழன் தினத்தன்று இயேசு சிலுவையில் அறையப்பட்டு துன்பங்களை அனுபவிப்பதற்கு முன்பதாக தன்னுடைய சீடர்களோடு இணைந்து இரவு உணவு அருந்துவதை நினைவுபடுத்தும் நிகழ்வு அமைகிறது.
இந்த நிகழ்வின் ஊடாக இயேசு திருப்பலியை ஏற்படுத்தினார். இந்த நிகழ்வை பரிசுத்த வேதாகமத்தில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்திகளும் விரிவாக எடுத்துரைக்கின்றன.
இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளி, அல்லேலூயா சனி ஆகிய தினங்களில் சிறப்பு நிகழ்வுகள் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும்.
அந்த வகையில் பெரிய வியாழனன்று இயேசு மூன்று முக்கிய நிகழ்வுகளை ஏற்படுத்துகின்றார் முதலில் இயேசு தன்னுடைய சீடர்களுடன் இரா உணவு உட்கொண்டு நற்கருணை எனும் அப்பம் பிட்கும் நிகழ்வாக ஏற்படுத்திருந்தார். பின்னர் அவர் தன்னுடைய சீடர்களின் பாதங்களைக் கழுவி அனைவரும் சமம் என்ற உண்மையை உறுதிப்படுத்துகின்றார்.
அதனையடுத்து அன்றைய தினம் குருத்துவத்தை ஏற்படுத்தும் இயேசு தமது நினைவாக அதனைத் தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றார். இன்றும் திருப்பலியின் திருவிருந்து நிகழ்வின் போது அது நினைவு கூறப்பட்டு “இதை என் நினைவாக செய்யுங்கள்” என்று இயேசு கூறிய வார்த்தைகள் பீடத்தில் குருவானவரினால் சமர்ப்பிக்கப்படுகிறது.இயேசு தம்முடைய சீடர்களுக்கு ஏற்படுத்திய அப்பம் பிட்கும் நிகழ்வை அனைத்து ஆலயங்களிலும் திருப்பலி பூசையின் போது குருவானவர் நிறைவேற்றுகின்றார்.
இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து அவர்களுக்கு பணி செய்யும் பொறுப்பையும் இயேசு தமது சீடர்களிடம் ஒப்படைத்தார். அந்த மறைபணியை குருக்கள்,துறவிகள், அருட் சகோதரிகள் பொதுநிலையினர் என அனைவரும் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த பெரிய வியாழக்கிழமை சிறப்பு பெறுகின்றது. அன்றைய தினம் அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் இந்த நிகழ்வுகள் இடம்பெறுவதுடன், குருவானவரினால் விசுவாசிகள் 12 பேருக்கு பாதம் கழுவப்படும். அதனையடுத்து திருப்பலியை ஏற்படுத்தும் நிகழ்வு சிறப்பிக்கப்படும்.
சகோ. பெலிக்ஸ்