லண்டன் செல்வதற்கான கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமென உத்தரவாதம் வழங்கியதால், திருச்சி சிறையில் உண்ணாவிரதமிருந்த முருகன் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முருகன் தன்னை முகாமிலிருந்து விடுவித்து, லண்டன் அனுப்ப வலியுறுத்தி கடந்த ஜன.29ஆம் திகதி உண்ணாவிரதம் இருந்துவந்தார். முகாமில் உண்ணாவிரதமிருக்கும் தனது கணவரின் உடல்நிலை மோசமாகி வருவதால், அவரைக் காப்பாற்ற நடவடிக்கைஎடுக்கக் கோரி, தலைமைச் செயலர், திருச்சி ஆட்சியர், பொலிஸ் ஆணையருக்கு முருகனின் மனைவி நளினி கடிதம் எழுதினார்.
இந்நிலையில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித் துணை ஆட்சியர் நஸிமுநிஷா, முருகனிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் லண்டன் செல்வதற்கான கடவுச்சீட்டை எடுப்பதற்காக சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, முருகன் 14 நாட்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது