Home » கொழும்பில் தேசிய சூரா சபையின் சுதந்திர தின நிகழ்வுகள்

கொழும்பில் தேசிய சூரா சபையின் சுதந்திர தின நிகழ்வுகள்

by Gayan Abeykoon
February 15, 2024 9:30 am 0 comment

தேசிய சூரா சபை 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தது. சபையின் தலைவர் சட்டத்தரணி ரீ.கே. அஸூர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள்  விரிவுரையாளரும் பௌத்த ஆய்வுகளுக்கான வல்பொல ராகுல நிலையத்தின் பணிப்பாளருமான கல்கந்தே தம்மானந்த தேரர் விசேட உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில்,

சக்தியும் பலமும் கொண்டவர்கள் அவற்றில் குறைந்தவர்களை ஆக்கிரமித்தமையை மனித வரலாற்றில் காணமுடிகிறது. இவ்வாறான ஆக்கிரமிப்புகளால் சிறிய நாடுகளது கலாசாரங்களும் அங்கு பாரம்பரியமாக இருந்து வந்த வாழ்வு முறையும் அதிகம் பாதிக்கப்பட்டன. நிலபுலன்கள் மீதான உரிமையை மக்கள் இழந்தனர். பொருளாதார முறை மாற்றமடைந்தது.

எல்லோரையும் இணைத்த ஒரு அரசாங்கத்தை எவ்வாறு ஏற்படுத்துவது என்று நாம் சிந்திக்க வேண்டும். ஒரு தேசத்தில் உள்ள குறிப்பிட்ட ஓர் இனத்தவர்கள் தாம் அந்த தேசத்துக்கு உரித்துடையோர் அல்லர் என்று உணரும் நிலைக்கு தள்ளப்படுகின்ற பொழுது நாம் என்ன சுதந்திரத்தை தான் பெற்றிருக்கின்றோம்?

200 வருட வரலாற்றைக் கொண்ட மலையக மக்கள் இன்றும் கூட இந்திய தமிழர்கள் என்று பெயர் சூட்டப்படுவதாயின் அது எவ்வளவு பெரிய அநியாயமாகும்? 1948 இல் கிடைத்தது சுதந்திரம் என்றும் தற்போது வைபவங்களை நடத்துவது மாத்திரமே போதும் என்றும் நினைத்தால் அது மிகப்பெரிய தவறாகும்.

சுதந்திரப் போராட்டத்திற்கு முடிவு கிடையாது. நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு  போராட்டத்தை நடத்த வேண்டும். இது சுதந்திர நாடாக இருக்குமாயின் இந்த நாட்டில் பிறந்த  அனைவரையும் அன்பால் நாம் அரவணைக்க வேண்டும். நானும் நீங்களும் இந்த பூமியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இந்த நாட்டுக்கு முதலில் யார் வந்தார்கள் என்பது முக்கியமல்ல. எல்லோரும் இந்த பூமியில் பிறந்தவர்கள் தான். எல்லோரும் சகோதர சகோதரிகளே.

எல்லோருக்கும் சமனான உரிமை, கௌரவம் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உழைப்பது சுதந்திரப் போராட்டமாகும்.

கோத்திர ரீதியாக பிரிந்திருந்த மக்களை முஹம்மத் நபியர்கள் முரண்பாடுகளை தவிர்த்து ஒற்றுமைப்படுத்திய தலைவராவார். சகோதரத்துவம், கூட்டுறவு, கௌரவம் என்பன அவரால் ஏற்படுத்தப்பட்டன. நாம் எமது நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் ஒவ்வொரு சாராருடைய ஆலோசனைகளும் பயன் மிக்கவையாக இருக்கும். இஸ்லாமிய மார்க்கத்திற்கும் இந்த பொறுப்புண்டு.

முஸ்லிம்களுக்கு மத்தியில் கட்சிகள் பின்னர் தான் உருவாகின. முஸ்லிம்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்குதாரர்களாக இருந்தார்கள். அவர்கள் தற்பொழுதும் பிரதான நீரோட்டத்தில் இருந்து வருகிறார்கள்” என்று தேரர் குறிப்பிட்டார்.

# இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர் தனதுரையில்;

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கெடுத்திருக்கிறார்கள். 1893 இல் இலங்கையில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த சேர் பொன்னம்பலம் அருணாசலம், 1908 இல் சேர் ஜேம்ஸ் பீரிஸ், சேர் பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் 1924 இல் கலாநிதி டி.பி. ஜாயா போன்ற அன்றைய தலைவர்கள் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரச்சாரம் செய்தார்கள்.

அவர்கள் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தின் பேச்சாளர்களாக அல்லாமல், ஒட்டுமொத்த நாட்டிற்காகவும் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வருந்தத்தக்க வகையில் அடுத்தடுத்த நிகழ்வுகள், அப்போது உருவாகி வந்த பன்மைத்துவ அடித்தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டன. இறுதியில் அவை  நாட்டின் பொருளாதாரத்திற்கும்  சமாதானத்திற்கும் செழுமைக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தின.

வரலாற்றாசிரியர்களான பேராசிரியர். கே.எம்.டி சில்வா, பேராசிரியர். சிறிமா கிரிபமுன, டாக்டர். லோனா  தேவராஜா மற்றும் பலர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் பலவற்றை பதிவு செய்துள்ளனர்.

சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரையை மேற்கோள்காட்டி டாக்டர் லோனா தேவராஜா குறிப்பிடுகையில்,  5 ஆம் நூற்றாண்டில் தாதுசேன மன்னரின் ஆட்சியின் போது கட்டப்பட்ட யோத வெவ பற்றி எழுதுகிறார். இலங்கையில் அந்தக் காலத்தில் வாழ்ந்த அரேபியர்கள் தான் அந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்கினார்கள் என்று அவர் பாராட்டுவதோடு அதன் நிர்மாணத்திற்குப் பிறகு 300 ஆண்டுகளுக்கும் மேலாக அதிலிருந்து தான் விவசாயத்திற்கு நீர் விநியோகம் செய்யப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். 13 ஆம் நூற்றாண்டில், அரசர்களது பாதுகாப்புத் துறையில் ஏராளமான முஸ்லிம்கள் பணியாற்றியதாக இத்தாலிய ஆய்வாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

அதேபோன்று முஸ்லிம்கள் எப்போதும் இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார்கள். நாட்டை எவரும் பிரிப்பதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்காக அவர்கள் பல தியாகங்களையும் செய்திருக்கிறார்கள்.

இந்த நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்காத ஒரே சமூகம் என்றால் அது முஸ்லிம்கள் மாத்திரம் தான் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT