அநுராதபுரம் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இந்நிதியைக் கொண்டு மாவட்டத்திலுள்ள 22 பிரதேச செயலாளர் பிரிவிலும் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுக்க தான் தீர்மானித்துள்ளதாகவும் அதற்காக ஜனாதிபதிக்கு எனது மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தலைமையில் அபிவிருத்தி திட்டங்களுக்கு உறுதிக்கடிதம் வழங்கும் நிகழ்வு (27) கலாவெவயில் இடம் பெற்றது. தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள், முஸ்லிம் பள்ளிவாசல்கள், பௌத்த விகாரைகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், விளையாட்டு கழகங்கள், மகளிர் சங்கங்கள், மத்ரஸாக்கள், சமய பாடசாலைகள், பாலர் பாடசாலைகள் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவே குறித்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி மாவட்டத்தின் 84 கிராமங்களில் உள்ள சங்கங்கள், நிறுவனங்களுக்கு தலா 05 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபா வரையான பணம் இதன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு அது பற்றிய உறுதிப்படுத்தல் கடிதம் பாராளுமன்ற உறுப்பினரினால் உரிய அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டன. இங்கு பௌத்த இந்து இஸ்லாம் மதத் தலைவர்கள், மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபர்கள், சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள்,முக்கியஸ்தர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திறப்பனை தினகரன் நிருபர்