சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் கொடுப்பனவு கோருவது தவறல்ல. எனினும் நாட்டின் இத்தகைய சந்தர்ப்பத்தில் அந்த கொடுப்பனவுக்காக நிதி வழங்கமுடியாதென நிதியமைச்சு தம்மிடம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவை தமக்கும் வழங்கக்கோரி இன்று (13) மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
துறைசார்ந்த 72 தொழிற்சங்கங்கள் அந்தப் போராட்டத்தை மேற்கொண்டதுடன் அது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு சுகாதார அமைச்சில் இடம்பெற்றபோதே அமைச்சர் ரமேஸ் பத்திரன இவ்வாறு தெரிவித்தார்.
அதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், மேற்படி தொழிற்சங்கத்தினர் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை கோரவில்லை. அவர்கள் ஒவ்வொரு மட்டத்தில் தமது கொடுப்பனவை கோரி வருகின்றனர்.
ஏப்ரல் மாதம் முதல் அரசாங்க ஊழியர்களுக்கு 10,000 ரூபா வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் சுகாதார சேவையில் ஈடுபடுவோர் வேறு நபர்களை ஒப்பிடாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்