76 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒலுவில் ஹம்றா 2001 ஓ / எல் மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கி பிரிவின் ஆலோசனைக்கு அமைய இடம்பெற்ற ‘உதிரம் கொடுத்து – உயிர்காக்க துணைநிற்போம்’ என்ற தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
தேசிய இரத்தவங்கிக்கு 159 தன்னார்வ உதிரக் கொடையாளர்கள் உதிரத்தை தானமாக வழங்கினார்கள். இக்கொடையாளர்களில் 30 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹம்றா 2001 O/L மாணவர் அமைப்பினரின் மாதாந்த செயற்பாடுகளில் பெப்ரவரி மாத்த்திற்கான நிகழ்வாக இரத்ததான நிகழ்வு அமைப்பின் தலைவர் ஆசிரியர் மு.அ.அஹமட் பாரிஸ் தலைமையில் ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் மேல்தளத்தில் 2024.02.04 அன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணியுடன் நிறைவுற்றது.
ஒலுவில், பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வினைத் தொடர்ந்து ஆரம்பமான இரத்ததான நிகழ்வில் இளைஞர்கள், யுவதிகள், ஊர் மக்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட உதிரக்கொடையாளர்களை கெளரவித்து உடனுக்குடன் கெளரவிப்புச் சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.
இப்பிரதேசத்தில் அண்மைக்காலத்தில், தாங்கள் முன்னெடுத்த இரத்ததான முகாம்களில் இன்றைய தினமே கணிசமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தமையை காணக்கூடியதாக இருந்தது என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிரிவின் பிரதம தாதிய உத்தியோகத்தர் பாரட்டினார்.
ஒலுவில் பிரதேசத்தில் உள்ள தன்னார்வதொண்டு அமைப்பினர் இவ்வாறான இரத்ததான நிகழ்வை வருடாவருடம் ஏற்பாடு செய்து நடத்திவருவது வழமையானதாகும். இம்முகாமில் பெருமளவிலான எண்ணிக்கையானவர்கள் கலந்து கொண்டனர்.
எம்.எப்.எம்.நவாஸ் (திராய்க்கேணி தினகரன் நிருபர்)