இந்தியாவும் மியன்மாரும் தங்களுக்களுக்கிடையிலான பன்முக இரு தரப்பு நட்புறவை மேம்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடியுள்ளன.
மியன்மாார் நாட்டுக்கான இந்தியத் தூதுவர் அபய் தகூர், மியன்மாார் நாட்டின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான தான் ஸ்வேயை நெய்பிடாவில் சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார் என்று மியன்மாருக்கான இந்திய தூதரகம் தமது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளது.
மியன்மாருக்கான புதிய இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அபய் தகூர், தமது நியமன நற்சான்றிதழையும் பிரதி பிரதமரிடம் கையளித்ததோடு இரு தரப்பு நட்புறவு குறித்தும் கலந்துரையாடினார் என்றும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பை தொடர்ந்து மியன்மாார் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகளையும் மியன்மாருக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவுக்கும் மியன்மாருக்கும் இடையில் இன, மத, கலாசார ரீதியில் வரலாற்று காலம் தொட்டு நட்புறவு நிலவி வருகிறது. இரு நாடுகளும் 1600 கிலோ மீட்டர்கள் நீளமான நில மற்றும் கடல் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுமார் 25 இலட்சம் மக்கள் மியன்மாரில் வசிக்கின்றனர். அத்தோடு மியன்மாார் மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்களை இந்தியா முன்னெடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.