சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தற்போது விளையாடி வரும் இலங்கையைச் சேர்ந்த வேக பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண கிரிக்கெட் வாழ்க்கையில் தனது தந்தைக்குப் பிறகு மஹேந்திர சிங் தோனிதான் அதிக முக்கியத்துவம் பெறுகிறார் என்று உணர்ச்சிமிகு கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இலங்கை அணிக்காக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண. 2022ஆம் ஆண்டு இவரின் திறமையை அறிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. ஜூனியர் மலிங்கா என்று அழைக்கப்படும் இவர் அதற்கு முன்பு வரை பெரிதாக பலரால் அறியப்படவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த பிறகு விளையாடும் பிளேயிங் லெவலில் முக்கிய நபராகவே மாறிவிட்டார்.
இவரின் பந்துவீச்சு திறமையை அறிந்த மஹேந்திர சிங் தோனி போட்டிகளில் இக்கட்டான சூழ்நிலைகளில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி இவரை CSKவின் நட்சத்திர பந்துவீச்சாளராகவே மாற்றிவிட்டார். அந்த அளவிற்கு இவரின் பந்துவீச்சில் துல்லியமும், தரமான வேகமும் அமைந்திருக்கிறது. பொதுவாக CSK விற்கு விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் சென்னை அணியின் சூழ்நிலை மிகவும் பிடித்து போய் CSK குடும்பத்தில் ஒன்றாகவே மாறி விடுவார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக பல வீரர்களை குறிப்பிடலாம். ஷேன் வாட்சன், மைக் ஹசி, மேத்யூ ஹைடன் போன்ற வீரர்கள் CSK இரசிகர்களின் ஏகோபித்த அன்பை பெற்றுள்ளனர். இந்த நிலையில் இலங்கையைச் அணியைச் சேர்ந்த மதீஷ தற்போது CSKவிற்காக விளையாடி வரும் நிலையில், தன் கிரிக்கெட் வாழ்க்கையில் தந்தைக்குப் பிறகு மஹேந்திர சிங் தோனி தன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வதாக உணர்ச்சிமிகு கருத்துக்களை கூறியிருக்கிறார். மேலும் தோனி சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “என் தந்தைக்குப் பிறகு எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மஹேந்திர சிங் தோனி என் அப்பாவின் இடத்தை செய்து வருகிறார். அவர் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் என்னை கவனித்துக் கொள்வதோடு நான் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சில ஆலோசனைகளையும் வழங்குகிறார். நான் வீட்டில் இருக்கும் போது என் தந்தை என்ன செய்கிறாரோ களத்தில் மஹேந்திர சிங் தோனியின் செயல்பாடுகள் அவரைப் போன்று இருக்கும்.
எனக்கு அதுவே போதுமானது. நான் களத்திலும், களத்திற்கு வெளியே இருக்கும் போதும் அவர் என்னிடம் நிறைய விஷயங்களை சொல்வதில்லை. அவர் சொல்லும் சிறிய விஷயங்கள் நிறைய வித்தியாசத்தை ஏற்படுகிறது. அதுவே எனக்கு நம்பிக்கையும் அளிக்கிறது.
நான் அடுத்த வருடமும் CSKஅணிக்காக விளையாடினால் மஹேந்திர சிங் தோனி எங்களுக்காக தயவுசெய்து இன்னும் ஒரு சீசன் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.