முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் வயல் வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக பட்டா வாகனமும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த சுதந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த நவீன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் வயல் வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் சாரதியை கைதுசெய்துள்ளனர்.
விபத்திற்குள்ளான இரண்டு வாகனங்களும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)