இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதிலும் ஆழப்படுத்துவதிலும் ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சபஹர் துறைமுக அபிவிருத்தியானது இந்தியா- ஈரான் இணைப்பு பார்வையின் கூட்டுத்திட்டம் என்று குறிப்பிட்டுள்ள கலாநிதி ஜெய்சங்கர், மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான் மற்றும் யூரேசியாவில் உள்ள சந்தைகளை அணுகுவதற்கு ஈரானின் தனித்துவமான புவியியல் அமைப்பின் மூலம் பயனடைவதில் இந்தியா ஆர்வம் கொண்டுள்ளதாகவும் மீண்டும் எடுத்துக்கூறியுள்ளார்.
ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தினார். இப்பேச்சுவார்த்தைகளின் ஊடாக இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தி ஆழப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
இவ்விஜயம் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் தெரிவிக்கையில், பிராந்திய இணைப்பு என்பது இந்திய – ஈரான் உறவுகளின் முக்கியமான தூணாக இருந்து வருகிறது. அதனால் சுமூகமான வர்த்தகப் பாதைகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் குறித்தும் இத்திட்டத்தை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இங்கு இடம்பெற்ற சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடர்பில் இந்தியாவின் உறுதிப்பாடும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இவ்விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு சந்திப்புக்கள், பேச்சுவார்த்தைகள் குறித்து திருப்தியை வெளிப்படுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், எங்களுக்கான இடையிலான உறவின் அனைத்து அம்சங்கள் தொடர்பிலும் விரிவாக மதிப்பாய்வு செய்ய முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.