தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் வன்முறையை ஆதரிப்பவர்களுக்கு பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் சட்டபூர்வ அங்கீகாரமும் வீசா வாய்ப்புக்களும் வழங்கப்படலாகாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதன் காரணமாக இந்தியாவில் தேடப்படுபவர்களும் தவறான ஆவணங்களைப் பயன்படுத்தி கனடா வீசா பெற்றுக்கொள்கின்றனர். அவர்களுக்கு அவ்வாறு வாய்ப்பளிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘வை பாரத் மெட்டர்ஸ்’ என்ற பெயரிலான தமது நூல் குறித்து புத்திஜிவிகள் மற்றும் தொழில் வாண்மையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், காலிஸ்தான் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் கனடாவில் அதிகரித்துள்ளன. அவர்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே எடுத்துக்கூறியுள்ளோம். தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் வன்முறையை ஆதரிக்கக்கூடியவர்கள் பேச்சு சுதந்திரத்தைப் பயன்படுத்தி தங்களை அரசியல் ரீதியாக ஒழுங்கமைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். அதற்கு இடமளிக்கலாகாது. அவ்வாறு இடமளிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்றும் கூறியுள்ளார்.