இந்தியாவின் மதசார்பின்மை என்பது அனைத்து மதங்களுக்கும் கலாசாரங்களுக்கும் மரியாதை அளிப்பதேயன்றி ஒருவரது மதத்தையோ கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தையோ மறுப்பதோ நிராகரிப்பதோ அல்ல என்று வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் கட்டாக்கில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அவர், நான் அனைத்து மதங்களையும் மதிப்பவன். அதனை சகலரும் அறிவர். அனைவரையும் அறிந்து கொள்ளும் வகையில் நான் செயற்படுபவன். எமது பாரத தேசத்திற்கு நீண்ட வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளன. அவை மிகவும் பெறுமதியானவை. தனித்துவங்கள் மிக்கவை. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
அதேநேரம் எமது நாடு மிகவும் திறந்த, பன்மைத்துவ மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சமூக கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. உலகின் மிகவும் புரிந்துகொள்ளும் தன்மை கொண்ட சமூகம் இங்குள்ளது. இவ்வாறான பன்மைத்துவ சமூக கட்டமைப்பை உலகில் வேறு எங்கும் நான் பார்த்ததில்லை.
எமது பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகக் காணப்படுகிறது. இது உலகின் பல நாடுகளை விடவும் மேம்பட்ட வளர்ச்சி வீதமாகும். அதேபோன்று
எமது தேசிய பாதுகாப்புக்கு ஒத்துழைக்கவும் பல பங்காளிகள் உள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் எம்மால் கைகோர்க்க முடியும். இவை அனைத்தும் எமது தேசத்தின் முன்னேற்றங்களின் வெளிப்பாடுகள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.