பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 313 ஓட்டங்களும், அவுஸ்திரேலிய அணி 299 ஓட்டங்களும் சேர்த்தன.
14 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியானது ஜோஷ் ஹேசில்வுட் பந்து வீச்சில் ஆட்டம் கண்டது. அப்துல்லா ஷபிக் 0, ஷான் மசூத் 0, சைம் அயூப் 33, பாபர் அஸம் 23, சவுத் ஷகீல் 2, சஜித் கான் 0, ஆகா சல்மான் 0 ரன்களில் நடையை கட்டினர்.
3ஆவது நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் அணி 26 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 68 ஓட்டங்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 6, அமீர் ஜமால் ரன் ஏதும் சேர்க்காமல் களத்தில் இருந்தனர்.
நேற்று (06) 4ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 115 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது.
முகமது ரிஸ்வான் 28, அமீர் ஜமால் 18, ஹசன் அலி 5 ஓட்டங்களில் வெளியேறினர். அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4, நேதன் லயன் 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
130 ஓட்டங்கள் இலக்குடன் பேட் செய்த அவுஸ்திரேலிய அணியானது 25.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 130 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்கவீரரான டேவிட் வார்னர் 75 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் சஜித் கான்பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா ஓட்டங்கள் ஏதும் சேர்க்காமல் நடையை கட்டினார். மார்னஷ் லபுஷேன் 73 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்களும் ஸ்டீவ் ஸ்மித் 4 ஓட்டங்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.