Monday, April 29, 2024
Home » தன்னுள் இராமர் இருப்பதை நெஞ்சை பிளந்து காட்டிய ஆஞ்சநேயர்

தன்னுள் இராமர் இருப்பதை நெஞ்சை பிளந்து காட்டிய ஆஞ்சநேயர்

by damith
January 1, 2024 6:00 am 0 comment

14 ஆண்டு கால வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

ராமனின் பெயரில் 14 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த பரதனின் ஆட்சியின் கீழ் மக்கள் எந்த ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்றாலும், ராமன் பட்டாபிஷேக தினத்தில் தான் மக்களின் முகத்தில் உண்மையான மகிழ்ச்சியும் ஆனந்தமும் வந்தது. ஸ்ரீ ராமனும், சீதா தேவியும் அரியணையில் அமர்ந்திருக்க, ராமனின் பாதத்தில் அடக்கத்தோடு அனுமன் அமர்ந்திருந்தார். அங்கதனோ உடைவாள் ஏந்தியிருந்தார். ராமனுக்கு வெண்கொற்றக் குடையை பரதன் பிடித்திருந்தார்.

லட்சுமணனும், சத்துருக்கனனும் வெண் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர்.பெரியவர்கள் மகுடத்தை எடுத்து கொடுத்த, ரகு குல குருவான வசிஷ்ட முனிவர் மகுடத்தை ராமபிரானுக்கு சூட்டினார்.

ஸ்ரீ ராமன் அரசனானதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தன் காலடியில் இருந்த அனுமனைப் பார்த்து ராமபிரான், ‘உன்னுடைய உன்னத அன்பை நான் எப்படி விவரிப்பேன். உதவி செய்வதில் உன்னைப் போல யாரையும் ஒப்பாக சொல்ல முடியாது. உன்னுடைய அன்பை எதாலும் அளக்க முடியாது. உன்னைப் போல கைமாறு பார்க்காமல் உதவக்கூடியவர் யாரும் இல்லை. உன் உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன். என் அன்பைத் தவிர விலை உயர்ந்ததை என்னால் தர இயலாது’ என அனுமனை தன் மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார். அனுமனின் உதவியையும், திறமையையும் பாராட்டி அவருக்கு ஒரு பரிசளிக்கும் விதமாக ஒளி வீசக்கூடிய முத்துமாலை ஒன்றை பரிசாக அளித்தார். ஆனந்தத்துடன் பெற்றுக்கொண்ட அனுமன், முத்துமாலையை ஒவ்வொன்றாகப் பிய்த்து ஒவ்வொரு முத்தாக கடித்து உடைக்கத் தொடங்கினார். இதைப் பார்த்து சபையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அனுமனுக்கு பித்துப் பிடித்துவிட்டது என ஒவ்வொருவரும் ஒருவிதமாக பேசத் தொடங்கினர். ஆனால் அனுமன் ஏன் அப்படி செய்தார் என்பதை ராமனுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் அவனின் பக்தியை பறைசாற்ற, அனைவரின் முன்னிலையில் ‘அனுமனே ஏன் இப்படி செய்தாய்?’ என கேட்டார். அதற்கு அஞ்சனை மைந்தனோ, ‘பிரபு உங்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள சீதா தேவி கொடுத்த முத்து மாலையில் உங்களின் இருவரின் உருவம் இருக்கும் என நினைத்து அதை ஒவ்வொன்றாக உடைத்துப் பார்த்தேன். ஆனால் அதில் ஒன்றில் கூட உங்களின் திரு உருவம் இல்லை.

உங்களின் திருவுருவோ, பெயர் சொல்லாத எந்த பொருளும் எனக்கு தேவையில்லை என கூறினார். இதைக் கேட்ட சபையில் இருந்தவர்கள், முத்துமாலையை மாசுபடுத்தியதை நியாயப்படுத்த இப்படி ஒரு காரணத்தை சொல்வதாக கூறினர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமனோ, ‘அப்படியானால் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பதாக கூறும் நீ, உன்னுள் நானிருப்பதை நிரூபித்துக் காட்ட முடியுமா?’ என கேள்வி எழுப்பினார். அனுமன் வசமாக மாட்டிக் கொண்டதாக அனைவரும் நினைத்த நிலையில், என்னுள் ஸ்ரீ ராமன் இருப்பதை இப்போதே என நெஞ்சப் பிளந்து காட்டி அதில் ஸ்ரீ ராமனும், சீதா தேவியும் இருப்பதை காட்டினார். அப்போது அனைவரும் அனுமனின் எல்லையற்ற அன்பை கண்டு வியந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT