– போதைப்பொருள் பாவனை, விற்பனை; 217 பேர் கைது
– பல்வேறு போதைப்பொருட்கள் மீட்பு
பாடசாலைகளின் சுற்றுவட்டத்திற்குள் காணப்படுகின்ற, மாணவர்களுக்கு பொருத்தமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் விடயங்களை அகற்றும் நடவடிக்கைக்கு அமைய 35,000 பேருக்கு விழிப்பூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அறிவுரைக்கமைய குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபரினால், போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பிரிவுகளில், பாடசாலைகளுக்கு 500 மீற்றர் சுற்றளவிற்குள், பாடசாலை மாணவர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காகச் செல்லும் புத்தக விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட ஏனைய விற்பனை நிலையங்கள், உணவு கொள்வனவு செய்யும் இடங்கள், முடி திருத்தும் நிலையங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களை அழைத்து, பொலிஸாரால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 18 முதல் 24 வரை குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளின் பிரதானிகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 45 பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள, 2,935 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள 3,183 பாடசாலைகளின் 500 மீற்றர் சுற்றளவிற்குள் அமைந்துள்ள குறித்த விற்பனை நிலையங்களைச் சேர்ந்த சுமார் 35,000 வர்த்தகநிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களைக்கு விழிப்பூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதன் அடிப்படையில், போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் 217 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 95 கிராம் ஹெரோயின், 7,130 கிராம் கஞ்சா, 85 சட்டவிரோத சிகரெட்டுகள், 16,561 போதை மாத்திரைகள், 48 கிராம் ஐஸ் போதைப்பொருள், 113 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாடசாலைக்கு 500 மீற்றருக்குள் பொருத்தமற்ற விடயங்கள் அகற்றப்படும்
போதைப்பொருள் ஒழிப்பு: 1,864 சுற்றிவளைப்புகளில் 1,865 பேர் கைது