உலகின் முதல் இ-விளையாட்டுத்தலம் அறிமுகம்
உலக இ-விளையாட்டுக்கள் சம்பியன்ஷிப் (GEG) என்பது உலக இ-விளையாட்டுக்கள் பெடரேஷனால் நடத்தப்படும் குறிப்பிடத்தக்க ஒரு போட்டி நிகழ்வாகும். இந்த நிகழ்வு இவ்வருடம் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் டிசம்பர் 12 முதல் 16 வரை நடைபெற்றது. இந்நிகழ்வின் போது பலவிதமான இ-விளையாட்டுக்கள் அரங்கேற்றப்பட்டதோடு, இந்தப் போட்டிகளில் காணப்பட்ட வினைத்திறன் மற்றும் குதூகலம் மிக்க கொண்டாட்டங்கள் மூலம் இ-விளையாட்டுக்களுக்கு உலக மக்கள் மத்தியிலுள்ள வரவேற்பானது எடுத்துக்காட்டப்பட்டது.
சவூதி eLeague தலைமையகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 250 இற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
GEG சம்பியன்ஷிப் 2023 நிகழ்வில், சமகால நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கமைய, பாரம்பரிய விளையாட்டுகளை இ-விளையாட்டுடன் ஒன்றிைணைக்கும் வகையில் அமைந்த விளையாட்டுக்களே அரங்கேற்றப்பட்டன. மேலும் இது #worldconnected என்ற ஹேஷ்டேக்கின் கீழ் நடைபெற்றதோடு சிறந்த சமூக கேமிங், பொழுதுபோக்கு மற்றும் கலாசார அனுபவங்களை வழங்கியதாக பலராலும் போற்றப்பட்டது. Dota 2, eFootballTM 2024, PUBG MOBILE மற்றும் Street Fighter 6 போன்ற பிரபலமான இ-விளையாட்டுக்கள் இந்நிகழ்வில் அரங்கேற்றப்பட்டன.
உலக இ-விளையாட்டுக்கள் சம்பியன்ஷிப்பில் சுவாரஷ்யமான போட்டிகளை கண்டுகளிப்பதிலும் விளையாடுவதிலும் ஆர்வம் காட்டும் இ-விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் ஏனைய ரசிகர்களை ஈர்ப்பதில் சவூதி இ-விளையாட்டுக்கள் சம்பியன்ஷிப் நிகழ்வானது கச்சிதமாக செயற்பட்டது என சவூதி இ-விளையாட்டுக்கள் பெடரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி துர்கி அல்-ஃபவ்ஸான் நம்பிக்கை தெரிவித்தார்.
அத்தோடு இந்த இ-விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ளவர்களது புத்தாக்க சிந்தனையை இந்நிகழ்வானது மேம்படுத்தும் என்பதோடு அந்நாட்டு பொருளாதார, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுத் துறைக்கும் பாரிய நன்மை பயக்கும் என்ற எதிர்பார்ப்புடனே நடாத்தப்பட்டதோடு இந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகியும் உள்ளது.
இந்தப் போட்டிகளின் நிறைவாக உலகில் முதல் இ-விளையாட்டுக்களுக்கான தனியான தளத்தை சவூதி அரேபியாவின் கித்தியா நிறுவியுள்ளது. இது இ-விளையாட்டுக்கள் மற்றும் உலக கேமிங் துறையில் சவூதி அரேபியாவின் உயர்ஸ்தானத்தை பறைசாற்றுவதோடு, அத்துறையை வளர்ப்பதற்கான சவூதியின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. அத்தோடு இவ்விளையாட்டுத் தலமானது அதிநவீன இ-விளையாட்டுக்களுக்கான சாதனங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதோடு விளையாட்டு அரங்கங்கள், சொகுசுத் தங்குமிட வசதிகள் அத்தோடு ஆடம்பர ஹோட்டல்களையும் அடக்கியே அமைக்கப்பட்டுள்ளது. இது 2030 ஆகும் போது வருடாந்தம் 10 மில்லியன் பார்வையாளர்களை ஈரக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
காலித் ரிஸ்வான்…?