வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பரிபாலனத்திலுள்ள வவுனிக்குளம் வான் பாயத் தொடங்கியதைக் கொண்டாடும் வகையிலும் அடுத்த வருட விவசாயச் செய்கைக்கான நீர் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையிலும் முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொங்கல் செய்து படையல் இடும் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) சிறப்பாக நடைபெற்றது.
வவுனிக்குளம் மட்டுமல்லாது, வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பரிபாலனத்திலுள்ள 54 குளங்களில் சுமார் 40 குளங்கள் ஏற்கெனவே வான் பாயும் நிலையை அடைந்துள்ளதாக, வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்தார்.
இந்த வருடத்தில் கிடைத்துள்ள கணிசமானளவு மழை வீழ்ச்சியைக் கொண்டு பல குளங்களின் உதவியுடன் விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடியவாறு இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
வவுனிக்குளத்தின் வான் பாய்வை பார்வையிடுவதற்காக வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தமது பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி அபாயகரமான இடங்களை தவிர்த்து நின்று, பாதுகாப்பான முறையில் வவுனிக்குளத்தின் வான்பாய்தலை பார்வையிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
புதுக்குடியிருப்பு விசேட நிருபர்