மன்னார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து இன்று (6) காலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட இ.போ.ச காலை 7.45 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்டப் பகுதியில் மன்னார் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சோதனையிடப்பட்டது.
மக்களினால் தொடர்ந்தும் முன் வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை இ.போ.ச பஸ்ஸொன்று நகர சுற்றுவட்ட பகுதியில் திடீரென நிறுத்தப்பட்ட போது பிரேக் லைட் ஒளிராத நிலை காணப்பட்டது.
இதன் போது குறித்த பஸ்ஸின் ஆவணங்களை சரி பார்த்த போதும் ஆவணங்கள் இருக்காத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் தண்டம் விதிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதனால் பஸ்கள் சில மணி நேரம் காத்திருந்தமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மேலும் சில பஸ்கள் சோதனை செய்யப்பட்ட நிலையில் உரிய ஆவணங்கள் காணப்படாத நிலையில் பிரேக் லைட் ஒளிராத நிலையும் காணப்பட்டது.
பயணிகள் மற்றும் அலுவலகங்களுக்கு கடமைக்குச் செல்வோர் என பலரும் தாமதங்களை எதிர் கொண்ட நிலையில் மன்னார் சாலை அதிகாரிகள் வருகை தந்து பொலிஸாருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட நிலையில் பஸ் பிரேக் லைட் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளை உடன் நிவர்த்தி செய்யுமாறு பொலிஸாரினால் வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை இ.போ.ச பஸ்கள் பொலிஸார் இடைமறிப்பது இல்லை. ஆவணங்களும் பார்ப்பது இல்லை. ஆவணங்கள் அனைத்தும் அலுவலகத்தில் உள்ளது. ஆனால் இன்றைய தினம் பயணிகளுடன் சென்ற பஸ்ஸை நிறுத்தி ஆவணங்களை காட்டுமாறு கோரினர். மேலும் சாரதியின் ஆசன பட்டி உள்ளதா, பிரேக் லைட் ஒளிர்கின்றதாக என பரிசோதித்தனர். மூன்று பஸ்களுக்கு எதிராக தண்டமும் விதித்துள்ளனர். இவ்வாறு பல தடவைகள் இடம்பெற்றுள்ளது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் மன்னார் சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மன்னார் குறூப் நிருபர் – எஸ்.றொசேரியன் லெம்பேட்