யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், நேற்று (04) மாலை வன்முறை கும்பல் ஒன்று இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட வன்முறை கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து, அக்கும்பல் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சிறிய ரக வேன் ஒன்றில் வந்த வன்முறை கும்பல் ஒன்று, சன நெரிசலான நேரம் காங்கேசன்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அதன்போது, வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, வன்முறை கும்பல் தமது வேனில் தப்பி சென்றுள்ளனர்.
அதனை அடுத்து பொலிஸார் வேனை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும், கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
தப்பிசென்ற வாகனத்தையும், வன்முறை கும்பலையும் பொலிஸார் தேடி வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்.விசேட நிருபர்