இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகளும் மேம்படும் என்று இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி தெரிவித்தார்.
இலங்கையின் கல்வித் துறையை மேம்படுத்துவதில் இந்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களதும் கல்வி நிறுவனங்களதும் வகிபாகத்தையும் அவர் பாராட்டியுள்ளார். அறிவியலில் மற்றும் மனிதநேய முன்னேற்றங்கள் பற்றிய SLIIT இன் சர்வதேச மாநாடு மறம் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வியியலாளர் விருதுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப வைபவம் கொழும்பில் கடந்த வௌ்ளியன்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்பையும் குறிப்பாக இரு நட்பு நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். மேலும் கல்வி சார் நிகழ்வுகளை நடாத்துவதன் மூலம் இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவும் அதேபோல பல்வேறு துறைகளில் உள்ள மக்களுக்கும் இடையேயான உறவுகளும் மேம்படும் என்றும் தெரிவித்தார்.
இன்று, பல வருட உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கற்றலின் பலனைக் கொண்டாட நாம் ஒன்றுகூடும் சிறப்பான நாளாகும். மாணவர்களிலும் சமூகத்தின் மத்தியிலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்த வலுவான அர்ப்பணிப்போடு செயற்படும் விதிவிலக்கான கல்வி வழங்குனர்களை அங்கீகரிக்கவும் பாராட்டவும் இத்தருணத்தை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.
இம்முக்கியமான நாளில், 2023 தேசிய கல்வியியலாளர் விருதுகளைப் பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு அவர்களுக்கு வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்காலத்தைப் பெறவும் வாழ்த்துகிறேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.