சர்வதேச மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தினத்தையொட்டி முல்லைத்தீவிலும் மன்னாரிலும் நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றன.
‘ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் மற்றும் உலகில் நிலையான மீன் வளங்களை உறுதி செய்தல்’ எனும் தொனிப்பொருளின் கீழ் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிலையில், சிலாவத்தை சந்தியிலிருந்து கவனயீர்ப்பு ஊர்வலம் ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்வரை சென்றதுடன், ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள், மீனவர்களின் பிரச்சினைகளை வாசகங்களாக எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியிருந்தனர்.
இந்த ஊர்வலத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவன உத்தியோகத்தர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, ‘கடல்சார் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் அமைப்புகளின் முதன்மையை புரிந்துகொள்வதும், உலகின் மீன் வளத்தை எதிர்கால சந்ததிக்குமாய் உறுதி செய்வதும்’ எனும் தொனிப்பொருளின் கீழ் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மீனவர் தின நிகழ்வு மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, பெண்களால் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.