வரட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு பாதிப்புக்கு மத்தியிலும் கடந்த பெரும் போகத்தில் வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு பாரிய நெல்விளைச்சலைப் பெற்றுக் கொள்ள முடிந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் முறைகேடாக செயற்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ரோகண பண்டார எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
விவசாயத்துறையில் விவசாயிகள் தமக்கான உரத்தை பெற்றுக் கொள்ள முடியாமல் தமக்கான வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியாமல் பெரும் சவால்களை எதிர்நோக்கிய காலம் இருந்தது.
நான் விவசாய அமைச்சராக பொறுப்பேற்ற போது பணம் இருந்தாலும் உரத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் இல்லாமல் விவசாயிகள் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கி வந்தனர். நாம் படிப்படியாக விவசாயிகள் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
சிறு போகத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் கடந்த பெரும்போகத்தில் முழுமையாக அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய முடிந்தது. டிஎஸ்பி வகை உரம் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது
அதன் மூலம் பாரிய விளைச்சளைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக தெரிவித்தார்.