பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோசமான சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட எம்பிக்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவங்களையடுத்து அரை மணித்தியாலங்களுக்கு மேல் சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்த சபாநாயகர், சபையில் அமைதியின்மை ஏற்படுவதற்கு காரணம் எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார ஆளும் தரப்பை வீடியோ எடுத்தமையாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனைத் கவனத்திற் கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு பாராளுமன்றம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்னவென, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியினால் ஆத்திரமடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்கட்சித் தலைவரின் உரைக்கு தடைகளை ஏற்படுத்தி அவரை நெருங்குவதற்கு முயற்சித்தமையால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. அதனையடுத்து நிலவிய அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே, சபாநாயகர் ஐந்து நிமிடங்களுக்கு சபை நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாக தெரிவித்து சபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்தார். எவ்வாறெனினும் அதனையடுத்து சபை நடவடிக்கைகள் சுமார் 40 நிமிடங்களுக்கு பின்னரே ஆரம்பிக்கப்பட்டன. பாராளுமன்றம் நேற்று சாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நிலையியற் கட்டளை 27/2இன் கீழ், கேள்விக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில், நாடு வங்குராேத்து நிலைக்கு செல்ல காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் தொடர்பாக பாராளுமன்றம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை என்ன என? கேள்வியெழுப்பினார். இதையடுத்தே சபையில் சர்ச்சை உருவானது.
லோரன்ஸ் செல்வநாயகம்