நிலக்கரி மூலமாக மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய குடியரசு முன்னணிக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
சம்மாந்துறையில் ‘கட்டியெழுப்புவோம்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டில் பரம்பரை அரசியல் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். திறமைக்கு முதலிடம் அளிக்கும் அரசியல் சூழல் உருவாக்க வேண்டும்.
நமது நாட்டை இக்கட்டான நிலையிலிருந்து மீட்பதற்கு சரியான தலைமை வேண்டும். வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் எங்களால் சிறந்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் படித்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து 2025 முதல் 2028 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வரலாமென்ற திட்டத்தை முன் வைத்துள்ளோம். 2028 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு செயற்படுகிறோம். இந்த குறுகிய 03 வருட காலத்தில் எங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய வழியை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
நிலக்கரி மூலமாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சூரிய சக்தி மின்சாரத்தை புத்தளம் முதல் முல்லைத்தீவு வரை மேற்கொள்ள முடியும். யாழ்ப்பாண பிரதேசத்தில் காற்றாடி மூலமாக மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியும். இவ்வேலைத்திட்டங்களை செய்வதற்கு நிபந்தனை இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்