காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில் எதிர்வரும் மணி நேரங்களில் இஸ்ரேலுக்கு எதிராக முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக ஈரான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரானிய அரச தொலைக்காட்சியில் கடந்த திங்கட்கிழமை இரவு நேரடியாக உரையாற்றிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹொஸைன் அமீரப்துல்லாஹி, “ஹிஸ்புல்லா சாத்தியமான அனைத்தையும் செய்யும்… காசாவில் சியோனிச அரசின் எந்த ஒரு நடவடிக்கையையும் போராட்டத் தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“எனவே, எதிர்வரும் மணி நேரங்களில் எந்த ஒரு முன்கூட்டிய நடவடிக்கையையும் பார்க்க முடியுமாக இருக்கும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே லெபனானுடனான இஸ்ரேலிய எல்லையில் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதேவேளை காசாவில் இஸ்ரேலின் குற்றங்கள் தொடர்ந்தால் உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் எதிர்ப்புப் படைகளை யாராலும் தடுக்க முடியாமல் போகும் என்று ஈரானிய உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி கமனெய் நேற்று எச்சரிக்கை விடுத்தார்.