அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனுஷ்க குணதிலக்க மீதான இலங்கை கிரிக்கெட் சபையின் தடை நீக்கப்பட்டுள்ளது.
சுயாதீன விசாரணைக் குழு ஒன்றின் பரிந்துரையை அடுத்தே அவர் மீது விதிக்கப்பட்டிருந்தது கிரிக்கெட் ஆடுவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
சிட்னி பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் சபை காலவரையற்ற தடையை அவர் மீது விதித்தது. இலங்கை அணி ரி20 உலகக் கிண்ணத்திற்கு பங்கேற்பதற்காக சென்றபோது குணதிலக்க இந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.
குணதிலக்கவின் விடுதலை மற்றும் அவரது கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் நாட்டின் கிரிக்கெட் எதிர்பார்ப்பு தொடர்பான தாக்கம் ஆகியவற்றை உன்னிப்பாக மதிப்பீடு செய்த பின், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிர ரத்நாயக்க தலைமையில் சட்டத்தரணிகளான நிரோஷன் பெரேரா மற்றும் அசேல ரேகாவ ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழு அவரது கிரிக்கெட் தடையை உடன் நீக்கி, தனது வழக்கமான கிரிக்கெட் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் தேசிய பணிக்கு திரும்புவதற்கும் அனுமதிக்கும்படி ஒருமனதாக பரிதுரை செய்துள்ளது” என்று இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது கொவிட் கட்டுப்பாட்டை மீறியதற்காக குணதிலக்க ஏற்கனவே ஓர் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட தண்டனைக்கு முகம்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.