அரசாங்கத்தின் 1500 கிலோ மீற்றர் வீதி புனரமைப்புத் திட்டத்தின் கீழ் களுத்துறை பிரதேச செயலகப் பிரிவில் எட்டு வீதிகள் காபர்ட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் மேற்படி பிரதேசத்தின் 08 வீதிகளுக்கு காபட் இடுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த வேலைத் திட்டத்தின் ஆரம்ப வைபவம் கடந்த திங்கட்கிழமை (6) களுத்துறை மூர் வீதியில் (Moor Street) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
வீதி அபிவிருத்திக்கான வேலைத் திட்டங்களின் பெயர்ப் பலகையை அமைச்சர் திரை நீக்கம் செய்து ஆரம்பித்து வைத்தார். களுத்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் ஹிசாம் சுஹைல் உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதேச வாழ் மக்களின் நீண்டகால தேவையை நிறைவு செய்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சருக்கு மக்களின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் இது விடயத்தில் கரிசனையுடன் செயல்பட்ட இல்யாஸ் அலாவுதீனுக்கும் தனது விசேட நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் முன்னாள் உறுப்பினர் ஹிசாம் தெரிவித்தார்.
மேற்படி வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் களுத்துறை தெற்கு குரே வீதி, சேக் நூர்தீன் மாவத்தை, பெட்ரிக் பீரிஸ் மாவத்தை, வாவி வீதி (வெவ வீதி), ஜயசுந்தர மாவத்தை, விக்ரமசிங்க பிளேஸ், மரிக்கார் வீதி மற்றும் மபூர் கிரசன்ட் மாவத்தை ஆகிய வீதிகள் காபர்ட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)