மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஆன போட்டியின் போது ரோஹித் சர்மா கண்கலங்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதனால் ரோஹித் சர்மா இரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 174 ஓட்டங்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்த போது ரோஹித் சர்மா 5 பந்துகளில் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் விக்கெட்டை இழந்து சென்ற போது பெரும் அதிருப்தியுடன் தலையை அசைத்துக் கொண்டே தான் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
போட்டி தொடர்ந்து நடந்தது. இடையே வீரர்கள் அறையில் ரோஹித் சர்மா தனிமையில் அமர்ந்திருந்தார். கெமரா அவர் பக்கம் திரும்பியது. அப்போது அவர் மிகவும் சோகமாக கண்கலங்கிய நிலையில் இருந்தார். அவர் கண்களை துடைத்த காட்சிகளும் நேரலையில் காட்டப்பட்டது. பின்னர் அந்த வீடியோவை இரசிகர்கள் இணையத்தில் பரப்பினர். ரோஹித் சர்மா கடந்த ஐந்து போட்டிகளில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கடந்த ஐந்து போட்டிகளில் அவர் 33 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதன் சராசரி 6.6. ஸ்ட்ரைக் ரேட் 94.3 மட்டுமே. ஆனால், மும்பை அணியின் முதல் ஏழு போட்டிகளில் ரோஹித் சர்மா 297 ஓட்டங்கள் குவித்திருந்தார். அந்த 7 போட்டிகளில் அவரின் பேட்டிங் சராசரி 49.5. அதன் ஸ்ட்ரைக் ரேட் 164 ஆகும். முதல் பாதியில் அபாரமாக பேட்டிங் செய்த ரோஹித் சர்மா இரண்டாவது பாதியில் மிக மோசமாக பேட்டிங் செய்து வருகிறார்.
அடுத்து அவர் இந்திய T20 அணிக்காக உலகக்கோப்பை தொடரில் விளையாட இருக்கும் நிலையில் ஃபார்ம் அவுட் ஆகி இருப்பதை எண்ணி அவர் மனம் உடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 போட்டிகளில் சரியாக ஆடாமல் போனதற்காக கண் கலங்கியது இந்திய கிரிக்கெட் இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் விரைவில் இதிலிருந்து மீண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஓட்டங்களை குவிக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.