திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாணவர்களுக்கு சைக்கிள்களை அம்மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாரச்சி நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார்.
இலங்கை சிறுவர் நிதியத்துக்கு ஜப்பான் சிறுவர் நிதியத்தால் வழங்கப்பட்ட சைக்கிள்களே சிறுவர் நிதியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
குச்சவெளி, கோமரங்கடவெல, மொரவெவ பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிக்கான காசோலை மற்றும் சுயதொழிலுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன. திருகோணமலை சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அரியரட்ணம் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராச்சி, மேலதிக மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட செயலக ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தம்பலகாமம் குறூப், கிண்ணியா மத்திய நிருபர்கள்