நம்பிக்கை நிறைந்ததாகவும், வாழ்க்கை குறித்த உலக சிறாரின் பெரிய மற்றும் சிறிய கேள்விகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நேர்மையான பதில்களை உள்ளடக்கியதாகவும் Cari bambini… அதாவது, அன்புள்ள குழந்தைகளே என்ற புத்தகம் எலெக்தா கிட்ஸ் என்ற பதிப்பகத்தாரால் வெளிவரவுள்ளது.
இன்று 17 செவ்வாய்க்கிழமை எலெக்தா கிட்ஸ் பதிப்பகத்தாரால் வெளியிடப்படவுள்ள வத்திக்கான் பத்திரிகையாளர் டொமேனிக்கோ அகாசோ என்பவரின் முயற்சியால் உருவான இப்புத்தகத்தின் முன்னோட்டமானது அக்டோபர் 14 சனிக்கிழமை இத்தாலியின் லா ஸ்தாம்பா பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
சிறு குழந்தைகளுடன் உரையாடுவதை மிகவும் விரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்ணத்தை அறிந்து உலகெங்கிலும் உள்ள சிறாரின் கேள்விகளை சேகரித்ததாகவும், அதற்கு திருத்தந்தை கூறிய பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார் டொமேனிக்கோ அகாசோ.
ஒரு தாத்தாவைப் போல, தனது குழந்தைப் பருவ நினைவுகளையும் சிறிய அனுபவங்களையும் திருத்தந்தை இக்கேள்விகளுக்கான பதில்களில் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும், வாழ்க்கையின் அர்த்தம், போரின் உணர்வு, கனவின் மதிப்பு என்பவற்றைப் பற்றியும் எடுத்துரைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் அகாசோ.
திருத்தந்தையின் தலைமைத்துவப் பணி வாழ்க்கை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது மற்றும் இயல்பானது என்று இப்புத்தகத்தில் திருத்தந்தை சிறாருக்கு எடுத்துரைத்துள்ளதாகவும், குடும்பத்துடன் இணைந்து படிக்கும் வகையில் நம்பிக்கை மனித நேயம் பற்றிய செய்திகள் நிறைந்ததாக இப்புத்தகம் வெளிவருகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் அகாசோ.
ஆசிரியர் டொமேனிகோ அகாஸோ
புத்தக ஆசிரியர், அரசியல் அறிவியல் பட்டதாரி, பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர், “லா ஸ்டாம்பா” செய்தித்தாளின் வத்திக்கான் நிருபர் மற்றும் திருப்பீடம் மற்றும் கத்தோலிக்க திருஅவையின் தகவல் தளமான “வத்திக்கான் இன்சைடர்” இன் ஒருங்கிணைப்பாளர் ஆவார். திருத்தந்தையின் திருத்தூதுப் பயணங்களில் பலமுறை உடன் பயணித்தவர். 2019 ஆகஸ்ட், 2020 மார்ச் என இருமுறை தனது செய்தித்தாளுக்கு திருத்தந்தையின் நேர்காணல்களைப் பதிவுசெய்துள்ளார்.