காசா மீதான தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகங்களையும் இடைநிறுத்துவதாக துருக்கி அறிவித்துள்ளது.
காசாவுக்கு இடையூறு இல்லாத மற்றும் போதுமான உதவிகளுக்கு இஸ்ரேல் அனுமதி அளிக்கும் வரை இது அமுலில் இருக்கும் என்று துருக்கி வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டில் சுமார் 7 பில்லியன் தொடர்கள் பெறுமதி கொண்டதாக இருந்துள்ளது.
துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான சர்வாதிகாரி போல் செயற்படுவதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். அவர் ‘துருக்கி மக்களை கருத்தில் கொள்ளாது வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளை புறக்கணிக்கிறார்’ என்று காட்ஸ், எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த வர்த்தக இடைநிறுத்தம் அனைத்து தயாரிப்புகளுக்கும் பொருந்தும் என்று துருக்கி வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘காசாவுக்கு இடையூறு இன்றி மற்றும் போதுமான அளவு மனிதாபிமான உதவிகள் செல்வதை இஸ்ரேல் அரசு அனுமதிக்கும் வரை புதிய நடவடிக்கையை துருக்கி கடுமையாக மற்றும் தீர்க்கமாக செயற்படுத்தும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1949 ஆம் ஆண்டு இஸ்ரேலை அங்கீகரித்த முதல் முஸ்லிம் பெரும்பான்மை நாடாக துருக்கி இருந்தபோதும் அண்மைய தசாப்தங்களில் இரு தரப்பு உறவுகளும் மோசமடைந்துள்ளன.