யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்பாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டின் காரணமாக சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட இரண்டு கடற்றொழில் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பொதுவான இறங்குதுறை மற்றும் மீன் சந்தை போன்றவற்றை பகிர்ந்து கொள்வது தொடர்பில் ஏற்பட்டிருந்த முரண்பாட்டை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலையீட்டு சுமுகமாக தீர்த்துவைத்துள்ளார்.
குறித்த விவகாரம் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் சம்மந்தப்பட்ட காக்கைதீவு பகுதிக்கு நேரடியாக சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரண்டு தரப்பு கடற்றொழிலாளர்களினது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
பின்னர், இரண்டு கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளையும் தனது யாழ். அலுவலகத்திற்கு வரவழைத்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். அதற்கமைய கடற்றொழில் அமைச்சரின் ஆலோசனையின்படி இரண்டு தரப்பினரும் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு இறங்கு துறையையும் மீன்சந்தை பிரதேசத்தினையும் சுமுகமாக பகிர்ந்து கொண்டு தொழிலை முன்னெடுக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
(கரவெட்டி தினகரன் ,யாழ். விசேட நிருபர்கள்)