உலக தொழிலாளர் தினமான மே, தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் செய்து முடித்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் உட்பட எதிர்வரும் தேர்தல்களுக்காக மக்கள் பலத்தை வெளிப்படுத்துவதற்கு அரசியல் கட்சிகள் இத்தினத்தை பயன்படுத்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
நாடு முழுவதும் 40 மே தின பேரணிகளும், கொழும்பு மாவட்டத்தில் சுமார் 14 மே தின பேரணிகளும் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்புடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஜக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கொழும்பு சத்தாம் வீதியில் நடைபெறவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி நான்கு மே தின பேரணிகளை நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு கன்னங்கர மாவத்தையில் மே தின பேரணி நடைபெறவுள்ளது. மாத்தறை, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் பேரணிகளை நடத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினப் பேரணி கம்பஹா பொது விளையாட்டரங்கிலும், ஐக்கிய சோசலிசக் கட்சி கிராண்ட்பாஸில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளன. முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் மே தின பேரணி கொழும்பு ஹைட் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. சுதந்திர கூட்டுத் தொழிற்சங்கம் கொழும்பு விஹார பூங்காவில் மே தினப் பேரணியை நடத்தவுள்ளது.