யுனெஸ்கோ அமைப்பு தனது 2024 ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர விருதை பலஸ்தீன ஊடகவியலாளர்களுக்கு வழங்கியுள்ளது. தற்போது நிலவும் போரில் செய்தி சேகரிப்பதற்கு அவர்கள் காண்பிக்கும் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்காக கௌரவிக்கப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டது.
பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தொடர்ந்து செய்தி அறிக்கையிடும் இந்த ஊடகவியலாளர்கள் அங்கீகரிக்கப்படுவதாக இந்த விருதுக்கான நடுவர் மன்றத்தின் தலைவர் மோரிசியோ வைபல் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசா போர் வெடித்தது தொடக்கம் இதுவரை குறைந்தது 97 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு அவர்களில் 92 பேர் பலஸ்தீனர்கள் என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
கடினமான மற்றும் அபாயகரமான சூழலில் அவர்களின் தைரியத்தை யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஒட்ரி அசுலாய் பாராட்டியுள்ளார்.
உலக ஊடக சுதந்திர தினத்தை ஒட்டி பலஸ்தீன கைதிகள் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரேலிய படைகளால் தொடர்ந்தும் 53 பலஸ்தீனர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.