சூரிய குடுப்பத்தில் உள்ள மிக அபாயகரமான குறுங்கோளில் இருந்து பெறப்பட்ட மண் மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த மாதிரிகளை எடுத்துவந்த நாசாவின் விண்கலம் கடந்த ஞாயிறன்று (24) உட்டா மாநிலத்தின் பாலைவன பகுதியில் தரையிறக்கப்பட்டது.
கடந்த 2020இல் பென்னு என்ற குறுங்கோளில் இருந்து ஒசிரிக்ஸ்–ரெக்ஸ் விண்கலத்தின் மூலம் இந்த மாதிரிகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த 300 ஆண்டுகளில் பூமியை தாக்க வாய்ப்பு இருக்கும் இந்த குறுங்கோள் மற்றும் சூரிய குடும்பம் பற்றி மேலும் புரிதலை பெற இந்த மாதிகளை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு அப்பால், 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரிய குடும்பத்தின் தோற்றம் மற்றும் பூமியில் உயிர்கள் தோன்றியது பற்றி புதிய உண்மைகளை இந்த மாதிரிகள் தரும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான பாலைவன நிலத்தில் திட்டமிட்டதை விடவும் மூன்று நிமிடத்திற்கு முன்னதாக விண்கலம் தரையைத் தொட்டது.
இது இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஒசிரிக்ஸ்–ரெக்ஸ் குழுவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஒசிரிக்ஸ்–ரெக்ஸ் விண்கலத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட குறுக்கோளில் இருந்து பெறப்பட்ட 250 கிராம் மண் மாதிரியைக் கொண்ட கார் வண்டியின் டயர் அளவான கொள்கலனே பூமியை அடைந்தது.
பென்னு என்ற குறுங்கோள் பூமியை விட பழமையானது எனவும் சூரிய குடும்பத்தின் பிறப்பு மற்றும் பரிணாமம் பற்றிய ஆய்வுக்கு அதன் ரகசியங்களை தெரிந்துக்கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் நாசா கூறுகிறது.