2023ஆம் மற்றும் 2024ஆம் ஆண்டில் சனத்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.
நாட்டின் 15ஆவது மக்கள்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அதை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இறுதியாக சனத்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
இதேவேளை, உலக சனத்தொகை தினம் இன்று (11) கடைப்பிடிக்கப்படுகிறது.
1989ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தினால் ஜூலை 11ஆம் திகதி உலக சனத்தொகை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக இது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Census & Statistics