வெளிநாடு செல்லும் தாய்மாருக்கு 'குடும்பப் பின்னணி அறிக்கை' அவசியமில்லை

- பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவிப்பு

இரண்டு (02) வயதோ அல்லது அதற்கு மேற்பட்ட வயது பிள்ளைகள் உள்ள பெண்கள் வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய குடும்பப் பின்னணி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனும் தேவையிலிருந்து விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக குடும்பப் பின்னணி அறிக்கை தொடர்பான தேவையை நீக்கல்

வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்கு 05 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் இன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் தற்போது நிலவுகின்ற 'குடும்பப் பின்னணி அறிக்கை' சமர்ப்பிக்கப்பட வேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றமையானது, பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாக பெண்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச அறிக்கைகள் பலவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறே ஒருசில சந்தர்ப்பங்களில் குறித்த அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக தேவையான அனைத்துத் தகைமைகளையும் பூர்த்தி செய்திருப்பினும், ஒருசில அலுவலர்கள் பல்வேறு காரணங்களால் குறித்த அறிக்கையைத் தாமதப்படுத்துவதால் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக செல்வதற்கு எதிர்பார்க்கின்ற பெண்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையை சமர்ப்பித்தற்குத் தகைமையற்ற ஒருசில பெண்கள் வேறு சட்டவிரோத வழிமுறைகளைக் கையாண்டு எந்தவொரு கண்காணிப்புக்களும் இன்றி வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இது தொடர்பாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை குறித்த அனுமதியை வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...