CEYPETCO எரிபொருள் நிலையங்கள் LIOC மற்றும் புதிய தனியார் நிறுவனங்களுக்கு

- அந்நியச் செலாவணியில் தங்கியிருக்காத வகையில் நிறுவனங்கள் தெரிவு

தற்போது CEYPETCO விடம் உள்ள 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களில், தெரிவு செய்யப்பட்ட மற்றும் புதியவற்றை LIOC மற்றும் தெரிவு செய்யப்பட்ட புதிய நிறுவனங்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் கணக்கில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆயினும், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்புநிலையம் CPC யினால் செயற்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்களுக்கு எரிபொருள் இறக்குமதி மற்றும் சில்லறை விற்பனை சந்தையை மேற்கொள்ள, அக்கம்பனிகளுடன் மேற்கொள்ளப்படும் நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை வழங்கியதன் அடிப்படையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதிக்காக, இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய வங்கிகளில் தங்கியிருக்காது, அந்நியச் செலாவணி தேவைகள் இன்றி செயற்படக் கூடிய திறனின் அடிப்படையில் குறித்த நிறுவனங்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்படுமென அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் விநியோகத்தில் 90% வீதமானவை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுவதுடன், எஞ்சிய 10% வீதமான விநியோகம் இந்திய ஒயில் கம்பனியால் (LIOC) மேற்கொள்ளப்படுகின்றது.

தற்போது இலங்கை முகங்கொடுத்துள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியால் நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவது மிகவும் சவால்மிக்க பணியாகவுள்ளது.

இந்நிலைமையின் கீழ் பெற்றோலிய உற்பத்திகளை மேற்கொள்கின்ற நாடுகளில் நிறுவப்பட்டுள்ள எண்ணெய்க் கம்பனிகளுடன் நீண்டகால ஒப்பந்தங்களை மேற்கொண்டு எமது நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிக்கு அழுத்தங்கள் ஏற்படாத வகையில் குறித்த கம்பனிகளின் நிதியைப் பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்காக அக்கம்பனிகளுக்கு வாய்ப்புக்களை வழங்குவது பொருத்தமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, முறைசார்ந்த பொறிமுறைகளைப் பின்பற்றி தெரிவு செய்யப்படும் எண்ணெய்க் கம்பனிகளுடன் நீண்டகால ஒப்பந்தங்களை மேற்கொண்டு இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதி செய்தல், பகிர்ந்தளித்தல் மற்றும் விநியோகித்தலுக்காக குறித்த கம்பனிகளுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...