ஜா-எல பொலிஸாரின் பிடியில் இருந்த சந்தேகநபர் ஒருவர், அருகில் இருந்த கால்வாயில் குதித்து நீந்தி தப்பிக்க முயன்ற நிலையில், அவரை பிடிக்க கால்வாயில் குதித்த, சேவைக்கு புதிதாக இணைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
ஜா-எல பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு தயாராகிய நிலையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அதிகாரிகள் குழுவொன்று பொலிஸ் கெப் வண்டியில் அழைத்து வந்துள்ளனர். அப்போது, சந்தேகநபர் கைவிலங்குடன் பொலிஸ் நிலையம் அருகே உள்ள பாரிய கால்வாயில் குதித்து தப்பி ஓட முற்பட்ட போது, சந்தேகநபரை கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் குழுவும் கால்வாயில் குதித்துள்ளனர்.
கால்வாயில் குதித்த ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 26 வயதான பொலிஸ் கான்ஸ்டபிளான கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் என்பவரே கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
திருமணமாகாத குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இதேவேளை, தப்பிச் செல்ல முயன்ற ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பான குறித்த சந்தேகநபர் ஏனைய பொலிஸ் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.