2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களுக்காக விசேடமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக, காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், இவ்வாறான முன்மொழிவுகளை தாம் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, “நாட்டில் கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி தீவிரமாக செயற்படுகின்றார். பங்காளிக்கட்சி என்ற வகையில் நாமும் எமது திட்டங்களை முன்வைத்து ஆதரவளிக்கின்றோம்.
இதன் பின்புலத்தில் அனைத்து தரப்பினருக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய 10 வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும்.
இதற்காக 2024ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தி இரு பல்கலைக்கழகங்கள் வரவுள்ளன” எனத் தெரிவித்தார்.