Home » விபத்துக்குள்ளான இராணுவ கெப் வாகனம்; ஸ்தலத்தில் இராணுவ வீரர் பலி

விபத்துக்குள்ளான இராணுவ கெப் வாகனம்; ஸ்தலத்தில் இராணுவ வீரர் பலி

- பார ஊர்தியை, முந்த முற்பட்டதால் நடந்த விபரீதம்

by Prashahini
April 26, 2024 10:43 am 0 comment

– மேலும் 9 பேருக்கு காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

இன்று காலை 6.00 மணியளவில் முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி (மாங்குளம் திசையிலிருந்து கிளிநொச்சி திசையில்) பயணித்த லொறி ஒன்றை, அதே திசையில் பயணித்த இராணுவ கெப் வாகனம் முந்த முற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கெப் வாகனம் திடீரென இயங்காமல் நின்றுள்ளது. அச்சமயத்தில் எதிரே வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி விடும் எனும் அச்சத்தில் விபத்தை தடுக்கும் நோக்குடன் லொறியின் சாரதி பயணிக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, கெப் வாகனத்தில் லொறி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் வீசப்பட்டு வீழ்ந்துள்ளனர்.

அதில் இராணுவ ஒருவர் மீது லொறி ஏறியதில் குறித்த நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மேலும் 9 இராணுவ வீரர்கள் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மரணமடைந்தவர் 39 வயதான, கல்கமுவ, எஹெட்டுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த, முருகண்டி முகாமில் கடமையாற்றும் இராணுவத்தின் 7ஆவது சேவைப் படையணியில் கடமையாற்றும் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT